Posts

The Role of Sri Ramakrishna in the revival of Sanatana Dharma (Tamil)

பாரத சனாதன தர்மம் புத்துயிர் பெற்றதில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெரும் பங்கு

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு மகாத்மா மாத்திரமல்ல, அவர் ஒரு அவதார புருஷரும் கூட. தனது நெருங்கிய பக்தர்களுக்கு, தாம் ஒரு அவதாரம் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்து மதத்தில், அவரைப் பெரிதும் போற்றுவதற்கான பல காரணிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்கே சுருக்கமாகக் காண்போம்:

  • அவர் வாழ்ந்த காலத்தில் (1836–1886) நம்மை ஆண்டு கொண்டிருந்த இருந்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் காரணமாய் மேற்கத்திய / கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்திருந்த நமது சனாதன தர்மத்துக்குப் புத்துயிர் தந்த மகான்களில் அவர் முக்கியமான ஒருவராக இருந்தார்.
  • இந்து மதத்தில் உள்ள பன்முகப்பட்ட மார்க்கங்களும் — அதாவது பக்தி மார்க்கம் (அதில் பல கடவுள் வடிவங்களை வணங்குவது உட்பட), ஞான மார்க்கம் (ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தில் முடிவுறும் அத்வைத தத்துவம்), யோக மார்க்கம் (பதஞ்சலி முனிவர் காட்டும் அஷ்டாங்க யோகம்), குண்டலினி யோகம் (தாந்திர மார்க்கம்) — என்று எல்லாமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு முறைமைகளே, அவையெல்லாமே உண்மையானவையே என்று உலகத்துக்கு நிரூபிக்கும் ஓர் முன்னுதாரண புருஷராக அவர் வாழ்ந்து காட்டினார். தீவிர நம்பிக்கையோடும் சிரத்தையொடும் ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து முழுமனதுடன் சாதனை செய்தால் அவ்வவ் வழிகளின் மூலம் பூரணத்துவத்தை அடையமுடியும் என்பதை அவர் பறைசாற்றினார்.
  • அவர் வாழ்ந்த காலகட்டத்தில், தாந்திர மார்க்கம் என்பது மிகவும் இரகசியமாக இருந்த ஓர் ஆன்மீகப் பாதையாக இருந்தது. பலரும் தவறான நோக்கங்களுக்காகத் அந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஓர் நிலைமை வங்காளத்தில் காணப்பட்டது. தன்னுள்ளேயே சிவ-சக்தி ஐக்கியத்தை அனுபவித்து அடைவதற்கான வழிமுறை என்கிற போர்வையில், நெருக்கமான ஆண்-பெண் உறவோடு தொடர்புடைய சடங்குகளைச் செய்யவும் ,மீன், மது, மாமிசம் இவற்றைக் கூடுதல் சுகிக்கவும் தந்திரம் வழி கோலியது.ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த பாதையிலும் துணிந்து இறங்கினார். வயதில் மூத்த பெண் குருவான பைரவி பிராமணயின் நேரடி வழிகாட்டுதலின்படி தாந்திரீகத்தின் கடுமையான நடைமுறைகளைப் பயின்று சாதனைகள் செய்து மிக உயர்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.
  • இந்த சுய அனுபவத்தின் அடிப்படையில் அவர், ‘(பலராலும் கண்டிக்கப்பட்ட) தந்திரம் கூட கடவுளை அடைவதற்கான ஒரு பாதைதான்’ என்று அறிவித்தாலும், அதை தனது சீடர்களுக்கு ஒரு சாதனா மார்க்கமாகப் பரிந்துரைக்கவில்லை. பெரும்பாலான மக்களுக்கு அந்த பாதையில் சென்று உயர்நிலையை அடைவதைவிட விட வீழ்ச்சியடையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரித்தார்.
  • அவரது அடிப்படை மனப்பாங்கிலும், ஆன்மீக ருசியிலும் அவர் ஒரு தேவி/ காளி உபாசகராகவே இருந்தார். அவரது ஆன்மீக சாதனா காலங்களின் தொடக்கத்தில் தட்சிணேஸ்வர் பவதாரிணி காளி கோவிலில் பூசாரியாகப் பொறுப்பேற்று) தீவிரமான தபஸ் செய்து, பவதாரிணியின் தரிசனம் பெற்றார். தேவி அவருள் ஐக்கியமானாள். அது முடிந்த பின் அவர் வங்காள வைணவ மார்க்கத்தைக் கடைப்பிடித்து ராதா-கிருஷ்ண பக்தியில் தோய்ந்தார். ஸ்ரீ ராமர், தேவி சீதா, கிருஷ்ணர், ராதா, அனுமன் போன்ற பல தெய்வங்களின் தரிசனங்களைப் பெற்றார். இந்த கடவுள் வடிவங்கள் அனைத்தும் நிச்சயமாக தமக்குள்ளேயே இருப்பதை அவர் உணர்ந்தார்.
  • தோதாபுரி எனும் அத்வைத ஞானியின் சீடராக ஆகி, நாம ரூபங்களைக் கடந்த இறைவனைத் தியானிக்கும் முறைமை பயின்று, நான்-நீ எனும் இரட்டையைக் கடந்து சச்சிதானப் பிரம்மத்தில் ஒன்றாகிவிடும் நிர்விகல்ப சமாதி அனுபத்தைப் பெற்றார்.
  • இந்து மதத்தின் பல்வேறு பாதைகள் மூலமும் இறை அனுபவத்தை ருசித்த அவர், இஸ்லாம் (ஸூஃபி) மற்றும் கிறிஸ்தவ மத மார்க்கங்களிலும் சாதனைகள் செய்தார். அந்த பாதைகளும் கடவுளை அடைவதற்கு வழிவகுக்கும் என்பதை அவர் அனுபவபூர்ணமாக உணர்ந்தார்.
  • இத்தகைய பல்வேறு வகைப்பட்ட சாதனா முறைகளின் மூலம் அறுதி உண்மையை உணர்ந்த அவர் “எத்தனை மதங்களோ, அத்தனை வழிகள்” என்று அறிவித்தார்.அவர் விஷ்ணுவின் பக்தர்களிடையே ஒரு வைணவராக இருந்தார்; தேவியின் பக்தர்களுக்கு மத்தியில் ஒரு சாக்தராக இருந்தார்; அவர் இயேசுவின் வழிபாட்டாளர்கள் மத்தியில் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அத்வைதிகளுக்கு மத்தியில் அவர் ஒரு ஞானியாக இருந்தார். யோகிகளின் பார்வையில் அவரும் ஒரு யோகி.வெவ்வேறு மாறுபட்ட மத நம்பிக்கை, இஷ்ட தெய்வ நம்பிக்கை, பல்வேறு பட்ட ஆன்மீக ருசிகள் இவற்றைச் சுமந்து கொண்டு ஆன்மீக வழிகாட்டலை நாடி அவரைச் சந்திக்கும் பேறு பெற்ற ஒவ்வொருவரும், ‘அவர் தங்களுடையவர்’ என்று நினைக்கும் விதத்தில் அவரவர் பக்குவம், மனப்பாங்குக்கு ஏற்ப, அவர்வர் நம்பிக்கையைக் குலைக்காமல் எளிமையான ஆன்மீக உபதேசங்கள் தந்து அவர் வழிகாட்டினார்..
  • “பெரும்பான்மை மக்களுக்கு ஏற்றது பக்தி மார்க்கமே’ என்றே அவர் உபதேசித்தார். அவரவர் தம் இஷ்ட தெய்வத்தை முழுமனதுடன் பக்தி செய்வதன் மூலமே பூரணத்துவம் அடையமுடியும் என்று அவர முன்மொழிந்தார்.
  • தீவிர ஆன்மீக நாட்டத்தோடு கடவுளை அடைய முனையும் சாதகர்களுக்கு ‘காமினி மற்றும் காஞ்சனப் பற்றுதான் (அதாவது பெண்ணாசையும், பணத்தாசையும் தான்) இரு பெரும் தடைகள் என்றார் அவர். இவ்விரண்டையும் கைவிடாமல், ஆன்மீக ரீதியில் வெற்றி பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று அவர் உறுதியாக, ஒளிவு மறைவின்றி, அலுக்காமல் உபதேசித்தார்.
  • அவர் திண்ணைப்ப் பள்ளிக்கூடத்தில் அடிப்படையாய் எழுதப் படிக்கக் கற்றதைத் தவிர வேறு ஒன்றும் படித்ததில்லை. பரம எளிமையான, கள்ளம் கபடமில்லாத ஓர் பிராமணர் அவர். அவர் பேசியதெல்லாம் சாமானிய கிராமத்து மக்கள் பேசும் எளிய வங்காள மொழி மட்டுமே. அவர் தம் கையால் பணம் காசை நிஜமாகவே தொடமுடியாத ஓர் நிலையில் இருந்தார். நாளைக்கு என்று எதையும் சேர்த்துவைக்கும் மனோ நிலை இல்லாதவராகவும் இருந்தார்.
  • தமது 24 ஆவது வயதில் ஐந்து வயது சாரதையை அவர் மணந்தார். சாரதை வயதுக்கு வந்து, தம் பதினெட்டாவது வயதில் கணவரோடு சேர்ந்து வாழ (ராமகிருஷ்ணர் தங்கி வாழ்ந்த) தட்சிணேசுவரக் கோவில் வளாகத்துக்கு வந்து சேர்ந்தார். அவளிடம் அவர், “இந்தக் கோவிலில் உறையும் பவதாரிணி காளியும், இங்கே ‘நகபத்’தில் (வாத்திய மண்டபத்தில்) வாழும் என் தாயும், நீயும் ஒன்றே” என்று சொல்லி, அவளும் நகபத்தில் தங்கி வாழ ஏற்பாடு செய்தார். காம உணர்வும் உறவும் ஏதுமின்றி ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து ஓர் உயரிய ஆன்மீக வாழ்க்கை வாழ முடியும் என்கிற ஓர் அற்புதமான முன்னுதாரணத்தை உலகுக்குத் தரும் விதத்தில் அவர்களது வாழ்க்கை அமைந்தது.
  • 12 ஆண்டுகாலம் பல்வேறு ஆன்மீக மார்க்கங்களின் வழி சாதனைகள் செய்து இறையானுபவத்தை எல்லா மார்க்கங்களின் வழியேயும் அடைந்த ராமகிருஷ்ணர் உலகிற்கு உபதேசிக்கத் தயார் ஆனார். ஆனால் சீடர்கள் எங்கே? அவர் தமக்கான சீடர்களை அனுப்பி வைக்குமாறு அன்னை காளியிடம் அழுது பிரார்த்தித்தார். அப்போது ஒவ்வொருவராய் அவரது இளம் சீடர்கள் – உலகியற் கல்வி படித்து, அதே சமயம் ஆன்மீக சம்ஸ்காரங்களோடு இறைவனைத் தேடும் இளைஞர்கள் அவரை நாடி வர ஆரம்பித்தார்கள். அவ்வாறே இல்லற பக்தர்களும். பலரும் அவரை நாடி வந்தாலும் அவரது “உள் வட்டத்து’ பக்தர்களும் சீடர்களுமாய், அவரை அவதார புருஷராக உணர்ந்து அடிபணிந்தவர்கள் சுமார் 33 பேர்கள் தாம்.
  • அவர் எப்போதும் கடவுளைப் பற்றியும், இறையானந்தத்தைப் பற்றியும், பக்தி, ஞானம், யோகம், ஆன்மீக சாதனைகள் இவை பற்றியுமே தம்மை நாடி வந்தவர்களிடம் வாய் ஓயாமல் பேசினார். அவர் பேசியதெல்லாம் பரம எளிமையான மொழிகள். அன்றாட வாழ்க்கை உதாரணங்கள் மூலமும், குட்டிக் கதைகள் மூலமும் அவர் ஆன்மீகத்தை உபதேசித்தார். பகவத் கீதை, உபநிடதங்கள் எல்லாம் படித்தும் தத்துவம் புரியாத பண்டிதர்களும் கூட, சம்ஸ்கிருதம் ஏதும் அறியாத பாமரரான அவரது அடி பணிந்து அவர் தரும் எளிய அனுபவ விளக்கங்கள் மூலம் ஞான ஒளி பெற்றனர்.
  • ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் அவர் வாழ் நாள்கழிந்த பிறகே வெளியுலகம் பரவலாக அறியும் வகையில் தான் அவரது அவதார நாடகம் அரங்கேறியது. அவர் தமது 50 ஆவது வயதில், தொண்டையில் வந்த புற்றுநோயின் காரணமாய் உடலை உகுத்தார்.
(மேலே படத்தில்:ஊணுறக்கம் துறந்து கடுந்தவத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணரின் துறவிச்சீடர்கள்)
  • சுவாமி விவேகானந்தரின் தலைமையில் ராமகிருஷ்ணரின் 16 சீடர்கள் உலக வாழ்வைத் துறந்து சன்யாசம் மேற்கொண்டனர். அவர் காலமான பிறகு பரம எளிமை வாழ்க்கையை மேற்கொண்டு அவர் காட்டிய வழியில் கடும் தவம் செய்தனர். ராமகிருஷ்ணர் காலத்துக்குப் பிறகு சுமார் 34 ஆண்டுகள் சாரதா தேவியார் உயிர் வாழ்ந்தார். அவரது தெய்வீகமான அருளும், ஆதரவும் ராமகிருஷ்ணர் உருவாக்கிய துறவியர் சங்கத்தை வழி நடத்தின. ராமகிருஷ்ணர் காலமான பிறகு பல ஆண்டுகள் கழித்தே ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது.
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தொடக்கம் முதலே துறவும் தொண்டும் அம்மடத்தின் இரு கண்கள் ஆகின. பாரத துறவியர் மடங்கள் சமுதாயத் தொண்டு ஆற்றுவதை மடத்தின் செயல்பாடாகக் கொண்டுவந்த முன்னோடி சுவாமி விவேகானந்தர். அதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தது அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் : “உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனே என்று கண்டு இறைவனுக்கு செய்யும் சேவையாக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்”.
  • சாத்திரங்களின் சாரத்தையெல்லாம் உள்ளடக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் பரம எளிமையானவை; அவையெல்லாம் அவரது காலத்துக்குப் பிறகே வெளியுலகம் அறிய வந்தது. அப்பணியைச் செய்ய ராமகிருஷ்ணர் தெரிந்தெடுத்து வைத்திருந்தவர் “ம-” எனும் புனைப்பெயரில் அறியப்படும் ஸ்ரீ மகேந்திரநாத் குப்தா எனும் ராமகிருஷ்ணரின் இல்லற சீடர் ஆவார். அவர் ராமகிருஷ்ணரின் உரையாடல்களை டயரிக் குறிப்புகளாக (ராமகிருஷ்ணரின் ஜீவ காலத்தின் கடைசி ஐந்து வருடங்களில்) எழுதி வைத்திருந்தார்.
ஸ்ரீ மகேந்திரநாத் குப்தா (ம-)
  • அவர், அவற்றை அவர் பிற்காலத்தில் விரிவாக்கி, “ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதம்” எனும் தலைப்பில் 5 புத்தகங்களாக வங்காள மொழியில் வெளியிட்டார். இவ்வரிய பொக்கிஷமாகிய நூல், ஆங்கிலம் (“The Gospel of Sri Ramakrishna”) உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் இது “ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்கிற பெயரில் 3 பாகங்களாகக் கிடைக்கிறது. இப்புத்தகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள தீவிர ஆன்மீக சாதகர்கள் மத வேறுபாடின்றி இன் நூலைப் படித்து மிக எளிமையாக இந்து மதத்தின் ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்து கொள்கிறார்கள்.

Loading

Guru, Sadguru and Acharya – difference (Tamil)

குரு, சத்குரு, ஆச்சாரியர் — இம் மூன்று பதங்களுக்குள் உள்ள வித்தியாசம் என்ன?

குரு என்கிற பதத்துக்கு, ‘இருளை நீக்குபவர்’ என்பது நேர்ப்பொருள் — அதாவது அறிவொளியைத் தந்து அறியாமை எனும் இருளைப் போக்கும் ஆசிரியரைக் குறிக்கும்.

ஆச்சாரியர் எனும் சொல்லுக்கு நேர்ப்பொருள், சரியான நடத்தையைச் சொல்லித்தருபவர் என்பது — இதுவும் பெருமளவில் ஆசிரியரையே குறிக்கிறது.

ஆனால், இந்து மதத்தில் குரு, ஆச்சாரியர் எனும் இரு பதங்களும் மிகப் பெரும்பாலும் மத/ ஆன்மீக ரீதியில்,  தனக்கு வழிகாட்டத் தன்னை அணுகும் சீடனை ஏற்று, அவனுக்கு வழிபாட்டு முறைமைகள், சாத்திர அறிவு இவற்றைக் கற்றுத் தந்தும், (அவசியமானால்) மந்திர தீட்சை நல்கியும், உபதேசங்கள் தந்தும், தாமே முன்னுதாரணமாக வாழ்ந்தும், வழிகாட்டித் தருபவரையே குறிக்கின்றன.

சில சம்பிரதாயங்களில் (உதாரணமாக வைஷ்ணவ சம்பிரதாயம்) அப்படிப்பட்டவரை (குரு என்று சொல்லாமல்) ஆச்சாரியர் என்றே சொல்வது வழக்கம்.

இருந்தாலும், சில நுணுக்கமான வித்தியாசங்கள் இருக்கின்றன:

குரு

சாமானியமான ஓர் குரு அடுத்தவருக்கு ஆன்மீகத்தைப் போதிக்கும் அளவுக்கு இறையருளும் இறைவனின் அதிகார முத்திரையும் பெற்றவராகவோ, பெறாதவராகவோ இருக்கலாம். ஆனாலும் அவர் தமது குரு வழியேயோ, தமது குருவால் வாரிசாக நியமிக்கப்பட்டோ, சுய முயற்சியிலோ, அல்லது தாம் பெற்ற ஒரு சிறிது ஆன்மீக அனுபவத்தின் பேரில் தாமே ஒரு குரு ஸ்தானத்தை ஏற்படுத்திக்கொண்டவராகவோ சீடர்களைச் ஏற்று அவர்களுக்கு உபதேசிப்பவராக இருக்கலாம்.

இத்தகைய குருமார்கள், தாம் செய்த சாதனா முறை, தமது குரு பரம்பரையில் கடைப்பிடிக்கப் பட்ட வழி/ சம்பிரதாயம், தமது குரு தமக்குக் குறிப்பாய்  உபதேசித்த சில வழிமுறைகள் இவற்றையே பெரும்பாலும் தம் சீடர்களுக்கும் உபதேசிப்பார்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட இஷ்ட தெய்வத்தை மட்டுமே வலியுறுத்திக் கும்பிடுவது, ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மட்டுமே உபதேசிப்பது, ஒரு குறிப்பிட்ட பிராணாயாம முறையை மட்டுமே வலியுறுத்திச் சொல்லிக்கொடுப்பது, ஒரு குறிப்பிட்ட தியான முறைமையை மட்டுமே வலியுறுத்திப் படிப்பிப்பது, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு சம்பிரதாயம், அல்லது சாத்திரக் கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பழக்குவது — என்பதாக அவர்கள் முறைமை இருக்கும். அவற்றில் குறைபாடுகளும், குறுகிய மனப்பாங்கும் கூட இருக்கலாம்.

இப்படிப்பட்ட சாமானிய குருவிடம் சேரும்போது, அவர் அறிந்த ஞானத்தை அவர் போதிக்கிறார், அதனால் சீடர் பலன் பெருகிறார். கூடவே அவரது அறியாமை, புரிதலில் உள்ள குறைபாடுகளையும் அவர் சீடருக்குப் போதிக்கிறார்! உதாரணமாக — தமது மார்க்கத்தைத் தவிரப் பிற மார்க்கங்களை வன்மையாகக் கண்டிப்பது, விமர்சிப்பது, பிற இறை வடிவங்களை தாழ்வாக நினைப்பது, மற்ற ஆன்மீக சாதனை முறைகளைக் குற்றம் கூறுவது, பிற குருமார்களைக் குற்றம் கண்டு விமர்சிப்பது போன்றவை!

கவனிக்க: எல்லா குருமார்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சில சமயங்களில், ஒரு குரு, முறையான கல்வி அறிவோ, முறையான சாத்திரப் படிப்பு படிக்காதவராகவோ இருந்தாலும் கூட, சுய அனுபவத்தில் இறைவனின் தரிசனம், அல்லது இறையுணர்வு பெற்றவராக  இருக்கலாம். அவர் பெற்றது ஓர் நொடிப்பொழுதாய் அமைந்த ஓர் இறைவனின் காட்சியாக, அல்லது ஜோதி தரிசனமாக  இருக்கலாம்; அல்லது மிக உயர்ந்த ஞானத்தின் ஓர் அக அனுபவத் துளியாக இருக்கலாம்; அல்லது பரிபூரண இறையநுபவமாகிய/ யோக அனுபவமாகிய  சகஜ நிர்விகல்ப சமாதியோ,  பக்தியில் பூரணமாய்ப் பழுத்த பிரேம பக்தியாகவோ, ஐயம் திரிபறப் பெற்ற பூரண அத்வைத (இரண்டற்ற) ஞான நிலையாகவோ கூட இருக்கலாம்.

யார் பூரணமான இறையனுபவத்தைப் பெற்று ஐயம்திரிபற நிற்கிறாரோ, அவர் குருஸ்தானத்தை ஏற்றெடுக்கும்போது, அவர் சத்குரு என அறியப் படுகிறார். சத்குருவைப் பற்றிக் கடைசியில் மீண்டும் விரிவாகப் பார்ப்போம்.

ஆச்சாரியர்

மிக உயர்ந்த நிலையில், ஆச்சாரியர் என்பவர் யார் எனப் பார்க்கையில், எவர் தக்க குருமார்கள் மூலம் சாத்திரங்களை ஆழ்ந்து கற்று, அவற்றை மனனம் செய்து, மீண்டும் மீண்டும் அலசி ஆராய்ந்து, ஆன்மீக சாதனை/தவத்தின் மூலமும், பிரார்த்தனை, தியானம் மூலமும் அவற்றின் உட்பொருளைத் தம்முள் தமக்கு எட்டிய அளவில் ஐயமின்றி மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு  ஓர் தெளிவான தத்துவக் கொள்கையாக உருவாக்கம் தருகிறாரோ அவர் (மத) ஆச்சாரியர்.

தாம் அறுதியாய் வரையறுத்து அறிந்த அந்தக் கொள்கையை அவர் தம் அணுக்கச் சீடர்களுக்குப் படிப்பித்துத் தருகிறார். தமது ஞானத்தை அவர் பிரச்சார சொற்பொழிவுகள் மூலம் பறை சாற்றுகிறார்.  பிற (மாற்றுத்) தத்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் சம்பிரதாயப் பண்டிதர்களோடும், விற்பன்னர்களோடும், குருமார்களோடும் பெரும் சபைகளில் அறிவுப் பூர்வமான, மூல சாத்திர (வேத வேதாந்த) நூல்களின் கருத்துகளின் அடிப்படையில் வாதங்களைச் செய்து, தமது கொள்கை, மற்ற கொள்கைகளை விட சிறப்பானது என நிறுவுகிறார். நமது இந்து மதத்தில் அப்படி அறியப்பட்டுள்ள மூன்று மாபெரும் ஆச்சாரியர்கள் சங்கராச்சாரியர் (அத்வைத சித்தாந்தம்), ராமானுஜாச்சாரியர் ( விசிட்டாத்துவைத சித்தாந்தம்), மற்றும் மத்வாச்சாரியர் (துவைத சித்தாந்தம்) ஆவர்.

இத்தகைய மதாசாரியர்களின் வழியில் பிற்காலத்தில்  வழி வழியாக குரு-சிஷ்ய பாரம்பரியம் மடங்கள் வழித் தொடர்கிறது. அடுத்தடுத்து அதே சம்பிரதாயத்தில் ஆச்சாரியர்கள் என்றே அழைக்கப்படும் குருமார்கள் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களில் வழியிலேயே வரும் மடத்தில் சில சம்பிரதாய/ விளக்க வித்தியாசங்களின்/ கருத்து வேறுபாடுகளும் வருகின்றன. அதன்  அடிப்படையில் உட்பிரிவுகளும் ஏற்பாட்டு உப மடங்களும் புதிய ஆச்சாரியர்களும் வருகிறர்கள். இவ்வகை ஆச்சாரியர்கள் மிகப் பெரும்பாலும் நல்ல கல்வி/கேள்வியறிவுடையவர்களாகவும், தமது சம்பிரதாயத்தில் கூறப்பட்டுள்ள சாத்திரங்கள், சாத்திர வியாக்கியானங்களில் அறிவுப் பூர்வமாய் நல்ல தெளிவும், தீவிர பிடிமானமும் உள்ளவர்களாக இருப்பார்கள். தமது சம்பிரதாயத்தில் சீடர்கள் கடைப்பிடிக்கவேண்டிய இறை வழிபாட்டு முறைகள், தோத்திர முறைகள், சடங்குகள், ஒழுக்க நியதிகள், கட்டுப்பாடுகள் இவற்றை எடுத்து இயம்புபவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படி ஒரு மடத்தில் குரு சிஷ்ய பாரம்பரியத்தில் வரும் ஆச்சாரியர்கள், சுயானுபவத்தில் இறைவனை அறிந்தவர்களாகவோ, உணர்ந்தவர்களாகவோ இருப்பார்கள் என்கிற உத்தரவாதம் ஏதும் இல்லை. (ஒரு சிலர் பெற்றிருக்கக் கூடும்). அந்த சம்பிரதாயத்தில் தீவிர பிடிப்பு, ஆழ்ந்த சாத்திர ஞானம், தீவிர குருபக்தி, குரு சேவை, ஒரு அவையில் நன்கு பேசும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு ஆச்சாரியர் தம் அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுப்பார். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஒரு குடும்பஸ்தராய் இருக்கும் பட்சத்தில், அவர் சன்யாசம் ஏற்று மடாதி பட்டம் ஏற்பார். இது வைணவமடங்களான ஆண்டவன் ஆசிரமம், ஜீயர் மடம் போன்றவற்றில் பின்படுத்தப் படும் முறை.

சில மடங்களில் (உதாரணமாக சங்கர மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்) பிரம்மசாரிகளே ஆசார்ய (/குரு) பதவிக்கு வருவார்கள்.

ஒரு பாரம்பரிய மடத்து ஆச்சாரியர், தமது சம்பிரதாயக் கொள்கைகள், இஷ்ட தெய்வ வழிபாடு, சாத்திரங்கள் இவற்றை மட்டுமே தம் சீடர்களுக்கு உபதேசிப்பார். அவர்களில் ஒரு சிலர், அபூர்வமாக உயர்ந்த தபஸ்விகளாகவும், அப்பழுக்கற்ற சன்யாசிகளாகவும் வாழ்ந்து இறையாநுபவத்தை சுயமாய் உணர்ந்தவர்களாகவும் திகழக் கூடும்.  அப்படிப்பட்டவர்கள் கூடுதல் மன விசாலத்துடன் மற்ற சம்பிரதாயங்கள், தத்துவங்களை ஏற்கும் தன்மை அடையப்பெற்றவர்களாகவும் இருக்கக் கூடும்.  இருந்தாலும், அவர்கள் தமது மட சம்பிரதாயங்களை வெளிப்படையாக மாற்றவோ, விசாலமாக்கவோ முனைய மாட்டார்கள்.  பிற முறைமைகளை வெளிப்படையாக சிலாகிப்பவர்களாகவோ, உயர்ந்த ஆன்மீகதளத்தில் ஒளிரும் அன்னிய சத்குருமார்களை வெளிப்படையாகப் பாராட்டிச் சிறப்பிப்பவர்களாகவோ பெரும்பாலும் இருக்கமாட்டார்கள்.

சில மடங்களில் (உதாரணமாய் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்) எத்தனையோ சன்யாசிகள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலர் ஆச்சாரிய ஸ்தானத்திலும், ஒரு சிலரே குருஸ்தானத்திலும் இருப்பார்கள். ஆச்சாரிய ஸ்தானத்தில் உள்ளவர்கள், நல்ல சாத்திர ஞானம் பெற்று சீடர்களுக்கு சாத்திர வகுப்பு எடுப்பவர்களாகவும், உபன்யாசங்கள், அவையுரைகள் நிகழ்த்துபவர்களாகவும் இருப்பார்கள். குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கே சீடர்களுக்கு மந்திர தீட்சை நல்கும் அதிகாரம் இருக்கும். (ஆச்சாரியர்கள், குருமார்களாகவும் காலப்போக்கில் ஆகலாம்).

 சத்குரு

குருமார்களிலேயே மிக உயர்ந்த நிலையில் திகழ்பவர் சத்குரு. அவர் தம் ஆத்ம நிலையை அல்லது இறையானுபவத்தை பூரணமாய் (சுய அனுபவமாய்) உணர்ந்து அதில் நிலை பெற்றவர்.  அவர் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால், இறைவனிடம் பூரண பிரேம பக்தி பூண்டு, அந்த ஆனந்த அனுபவத்திலேயே சதா திளைத்து, பின் தம் இறைனுடனேயே ஒன்றியவர். அவர் ஞான மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால், தம் சுய நிலை எப்போதும் அழிவற்ற ஆத்மாவே என்பதை அனுபவத்தில் உணர்ந்து ஆத்ம-பரமாத்ம பேதமின்றி ஒன்றேயான அத்வைத உணர்வில் திகழ்பவர். அவர் யோக மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால், சகஜ நிர்விகல்ப சமாதி என்னும் சமாதி நிலையை எட்டியவர். சத்குரு என்பவர் மனதை அழித்தவர்; பரிபூரணமாய் அகங்காரத்தை நிர்மூலம் ஆக்கியவர்; தமது ஜன்மாந்திர வாசனைகளிலிருந்து விடுபட்டவர்.  ஒரு ஜீவன் முக்தராய் தம் உடம்பில் இருந்துகொண்டு, உலகியர், சீடர்கள், பக்தர்களின் நலனுக்காகவே இவ்வுலகில் வளைய வருபவர்.

ஒரு சத்குரு, கல்வியறிவே இல்லாதவராக இருக்கலாம்; ஆரம்பப் பள்ளிக் கல்வியைத் தாண்டி மேலே படிக்காதவராக இருக்கலம். ஆனாலும் அவருக்கு சகல சாத்திரங்கள் கூறும் சாரமான உண்மைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தம் சுய அனுபவத்தின் பயனாய்த் தெரியும். மெத்தப் படித்த பண்டிதர்களும், ஆச்சாரியர்களும் கூட அவர் அடி பணிந்து, அடக்கத்துடன் அமர்ந்து தாம் ஆண்டுக்கணக்கில் படித்த சாத்திரங்களில் தமக்கு விளங்காத பொருள்களை அவரிடமிருந்து கேட்டுப் பெறுவர்.

சத்குரு என்பவர் சிகரத்தை எட்டிப் பிடித்தவர்.  அங்கிருந்து அவர் பார்க்கையில், அந்த் உச்சியை அடைய உள்ள எல்லாப் பாதைகளுமே அவர் கண்ணுக்குத் தெளிவாய்ப் புலப்படுகிறது.  அவர் ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்தின் வழியில் சாதனை செய்து மெய் நிலையை அடைந்திருந்தாலும் கூட அவர் அந்த சம்பிரதாயத்துக்குள் கட்டுப்பட்டவரல்ல. அவர் சத்தியப் பொருளை அடைய உள்ள எல்லா சரியான மார்க்கங்களையும், குருமார்களையும், மகாத்மாக்களையும், சாதனா முறைகளையும், சாத்திரங்களையும் ஏற்கிறார். தமது அளவிலாக் கருணையின் காரணமாக, எவர் எந்த சம்பிரதாயத்தை/ உட்பிரிவைச் சேர்ந்தவராயினும், அதன் வழியிலேயே அவர் மேலான கதியை அடையப் பெரும்பலும்  ஊக்குவித்து ஆதரவும் அருளும் நல்குகிறார். அவர் தம்மை ஓர் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் பெரும்பாலும் அடைத்துக்கொள்வதில்லை.

ஒரு மெய்யான சத்குரு, எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். மதங்களுக்கும் அப்பாற்பட்டவர். அவரது உயர் நிலையை அறிந்துகொள்ளும் பேறு பெற்றவர்கள், மத வித்தியாசங்களை மறந்து அவரைச் சரணடைகிறார்கள். அவர் எல்லாத் தரப்பு, எல்லா மதத்து மக்களையும் காந்தம் போல ஈர்க்கிறார். மனித இனத்தின் மீது அவரது அன்பு தடையின்றிப் பொங்கிப் பிரவகிக்கிறது.

ஒரு சத்குரு, முன்பேயுள்ள ஓர் மடம்/ ஆசாரியப் பரம்பரையில் வருவார் என்று சொல்வதற்கில்லை. மிகப் பெரும்பாலும் ஓர் சத்குரு சுயம்புவாக (தாமே உருவானவராக)  திடுமென மனித குலத்தில் தலையெடுக்கிறார். எங்கோ ஓர் தொலை தூரக் கிராமத்தில், ஆன்மீகம் என்றால் என்னவென்றே அறியாத சாமானிய ஏழைக் குடும்பத்தில் கூட ஓர் சத்குரு வந்து பிறக்கக்  கூடும்.

ஒரு சத்குரு, அவதார புருஷராகவும் இருக்கக் கூடும்;  ஒரு அவதார புருஷர், சத்குருவாகவும் செயல்படக் கூடும். அப்படி இறைவனின் இச்சையால் மனித வடிவெடுத்துவரும் ஓர் அவதார புருஷர், உலகிற்குப் போதிக்க வருகிறார்; ஓர் புதிய பாதையைக் காட்டித் தருகிறார்; குளம், குட்டையில் தேங்கி நாறிப்போகும் பழைய நீரில் புது வெள்ளம் வந்து கலப்பது போல, ஒரு மதத்திலோ, சம்பிரதாயத்திலோ உயிரோட்டம் போய்த் தேக்க நிலை வரும்போது அவர் வந்து புதிய உத்வேகம் அளிக்கிறார்.  சம்சாரக் கடலில் மூழ்கிவிடாது மக்களை ஏற்றி அக்கரை சேர்க்கும் ஓர் பெரும் கப்பல் போல் அவர் வருகிறார்.

ஒரு சத்குருவோ அவதார புருஷரோ வரும்போது, அவர்கள் அடிப்படை நோக்கு மக்களை ஆன்மீக ரீதியில் முன்னேற்றிக் கொண்டுபோவதே என்றாலும், அவர்கள் உலகியல் தளத்திலும் செயலாற்றி மக்களின் உலகியல் தேவைகளை நிறைவேற்றுவதிலும், சமுதாய ரீதியில் மானுட சேவையையை சிரமேற்கொண்டு செய்வதிலும் கூடத் தயக்கமின்றி இறங்குகிறார்கள். மக்களின் தேவைக்கென, கல்வித் துறை, மருத்துவத்துறை, இயற்கை இடர்கள் வருகையில் நிவாரணப் பணிகள் என்று பல்வேறு செயல் திட்டங்களிலும் மாமெரும் சக்தியோடு செயல்படுகிறார்கள். தனி நபர் வாழ்வில் கூடக் கொடும் நோய், கடும் வறுமை, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதல், பிள்ளைப் பேறு இன்மை போன்ற பிரச்சனைகளுக்கு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் தீர்வு தந்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியையும் ஆன்மீக விழிப்புணர்வையும் தருகிறார்கள்.

ஒரு சத்குரு வருகையில், அவரது வழிகாட்டுதலில் ஓர் புதிய குரு சிஷ்ய பரம்பரை உருவாகலாம்.  அந்தப் பாரம்பரியத்தில் வரும் பிற்கால குருமார்கள், அந்த சத்குரு காட்டித் தந்தபாதையை பிற்கால சந்ததியினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி தருகிறார்கள்.  அப்படி ஓர் ஒரு குரு-சிஷ்ய பாரம்பரியம்  சில நூற்றாண்டுகள் கூடத் தொடர்ந்து செயல்படலாம். அந்தப் பாரம்பரியத்திலேயே பிற்காலத்தில் மற்றொரு சத்குரு தோன்றலாம்; தோன்றாமலும் போகலாம். அவ்வாறே, காலம் செல்லச் செல்ல அந்தப் பாரம்பரியமே தகுதியற்ற குருமார்கள் வருகையினால் வீரியம் இழந்து தாழ்ந்தும், நசித்தும் போகலாம்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில், இறையிச்சையால் மற்றொரு இடத்தில், மற்றோரு சூழலில் ஓர் புதிய சத்குரு தோன்றுகிறார். அந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் அவர் ஓர் புதிய வழி, புதிய வாழ்வியலைக் காட்டி, சனாதன தர்மத்தைப் புதுப்பிக்கிறார்.

இந்தப்  பாரத தேசத்தில் அனாதி காலமாய் நடந்துகொண்டிருக்கும் ஓர் நிகழ்வு இது.  இந்தப் புனித மண்ணின் மேன்மையையும், சனாதன தர்மத்தின் தனிப்பெரும் தன்மையும் அதுவே.

Loading